|
இவரது அடுத்த படம் எப்படி இருக்கும். அதில் இவரது தோற்றம்
எப்படி இருக்கும்? என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு
அலையை ஏற்படுத்துபவர். இவருடன் இணைந்து நடிக்க வேண்டும்
என்கிற ஆசையை பல நட்சத்திரங்களுக்கு ஏற்படுத்தியவர். இவரை
வைத்து ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என பல இயக்குநர்களை
ஏங்க வைப்பவர். வெற்றிகள், விருதுகள் என்று சிகரம்
தொட்டாலும் புகழ் போதை தலைக்கு ஏறாமல் தன்னியல்பை
பராமரிப்பவர், பாதுகாப்பவர். இப்படிப்பட்ட சொல்லிக்
கொண்டே போகலாம் விக்ரம் பற்றி.
கந்தசாமியை ஒரு வழியாக கரையேற்றிவிட்டு, இதோ அடுத்த
உழைப்புக்குத் தயாராகிவிட்டார். மணிரத்னம் இயக்கும் ராவணன்
படம்தான் அது.
இதோ..உங்களுக்காக நட்சத்திர ஒளி வட்டம் மறந்து மனம்
திறந்து பேசுகிறார் விக்ரம்.
மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடிக்கும் அனுபவம்
எப்படி இருக்கிறது?
கேட்டதும் கண்களை மூடி அந்த நிமிடங்களை மனக்கண்ணில்
மீண்டும் பார்க்கிறார். பிறகு பேச ஆரம்பிக்கிறார்.
''ராவணன் படத்தைப் பற்றிச் சொல்லணும்னா.. இந்தப்
படத்துக்கு சாலக்குடியில் மலைப்பாதைகளில் ஷூட்டிங்
நடந்திச்சு. கல்கத்தா போனோம். அங்கே தாங்க முடியாத தூசு.
அப்புறம் மத்தியப்பிரதேசம் போனோம் குளிர்ச்சியா
பனிமூட்டமா அருமையான க்ளைமேட். இப்படி ஒன்றுக்கொன்று
சம்மந்தமில்லாத வித்தியாசமான லொக்கேஷன்ஸ். அதுதான்
மணிசார். எனக்கு இப்படிப்பட்ட டைரக்டர்ஸ் கூட வேலை
பார்க்கிறதுதான் ரொம்பப் பிடிக்கும். பாலாவும்
அப்படிப்பட்ட ஒருத்தர். ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டால்
அதோட அடியாழம்வரை போகக் கூடியவர். அதுக்கு எவ்வளவு
நேரமாகும்கிறதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே மாட்டார்.
நானும் அந்த ரகம்தான். அதனாலதான் பாலா, விக்ரம்
காம்பினேஷன்ல வலிமையான படங்களைக் கொடுக்க முடிஞ்சுது.''
என்கிற விக்ரம் பொதுவாகவே தான் ஏற்கும் வேடத்துக்காக
தன்னை வருத்திக் கொண்டு, தன்னை தயார்படுத்திக்கொள்பவர்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க நிச்சயமான இன்னும் கூடுதலாக
தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பார்.'
ஆம் ஐ கரெக்ட் விக்ரம்?
''ஒரு கேரக்டர் பிடிச்சுதுன்னா அதக்குள்ளே போய்
உட்கார்ந்துக்கிறதுதான் என்னோட வழக்கம். மணி சார்
எப்பவுமே வித்தியாசமா முயற்சி செய்றவர். அது அவர் ஸ்டைல்.
ஒவ்வொரு காட்சியையும் அசாதாரணமா வழக்கமில்லாத ஒண்ணா
இருக்கணும்னு விரும்புகிறவர். அந்தப் படம். வெற்றி
பெறலாம், பெறாமல் போகலாம் அது ரெண்டாம் பட்சம். ஆனால்
அந்தப் படம் எல்லாருக்கும் நல்ல அனுபவமா இருக்கும்ங்கிறது
மட்டும் உறுதி. அவர் காட்சிகளை எடுக்கிற போது ஒரு
போருக்குத் தயாராகிற போர் வீரனைப் போல முனைப்பா -
துடிப்பா - மூர்க்கமா இருப்பார்.அவரோட ஈடுபாட்டை அவ்வளவு
சுலபமா சொல்லிட முடியாது. தண்ணீர் நடுவுல நின்னு
தத்தளிக்கிறபோதும் சரி. நீர் வீழ்ச்சியின் கீழே
நின்னாலும் சரி. நான் சொல்றபடி செய்யின்னு சொல்வார்.
நீர் வீழ்ச்சி மலை... தண்ணீர்னு பார்க்காம தள்ளி விடுவார்.
நான் பயந்து முழி பிதுங்கி முழிச்சா, இந்த சீன்ல இப்படி
முழிக்கக் கூடாது, லுக் சரியில்லைன்னு சொல்வார். நடிச்சு,
முடிச்நதும் அப்பாடா கடவுளே எப்படித்தான் முடிஞ்சுதோன்னு
பெருமூச்சு விடுவேன். அந்த அளவுக்கு தான் எடுக்க
நினைக்கிறதை எடுக்கிறதுல துளிக்கூட இரக்கம் காட்ட மாட்டார்
மணிசார். நான் சொல்றது உங்களுக்கு அதிகமா தோணும். படம்
வந்ததும் பாருங்க உங்களுக்கே புரியும்.''
என்று மணிரத்னத்தைப்பற்றி சிலாகிக்கும் சீய்யான், ராவணன்
படத்தில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யாராயுடன் இணைந்து
நடித்து வருகிறார்.
அந்த அனுபவம் பற்றி...?
''அபிஷேக்கை எனக்கு ரொம்ப நாளாவேத் தெரியும். நாங்க நல்ல
ஃப்ரண்ட்ஸ். ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் நுழைஞ்சிட்டாப் போதும்
அங்கே ஓர் அதிர்வு அலைகள் பரவ ஆரம்பிச்சுடும். அப்படி ஒரு
கலகலப்பான மனிதர் அபிஷேக். அவருக்கு ஷாட் முடிஞ்சாலும்
போகமாட்டார். என் ஷூட் எடுக்கும்போது இருப்பார். மலை,
பாறைகள்ல ஷூட் பண்றப்போ கென்னி சார் பார்த்து காலடி
எடுத்து வையுங்க. இது கொஞ்சம் ஆபத்தான இடம். பார்த்தால்
தெரியாது ஆளை சறுக்க வச்சு கவிழ்த்திடும்... ரொம்ப
கவனம்... அந்தப் பாறை மேல இதுக்கு மேல ஏற வேண்டாம்
ஆபத்து... இப்படி எல்லாம் சொல்லி அக்கறையா
கவனிச்சுப்பார். சில நேரம் இந்த சீன்ல உங்களுக்கு கண்ணுல
தண்ணி வரவைக்க கிளிசரின் வேண்டியிருக்காது. ஏன்னா இது
ரொம்ப நீள ஷாட்... அது எடுத்து முடிக்கிறதுக்குள்ள
உங்களுக்கு தானா கண்ணீர் வந்துடும்பார். இப்படி நிறைய
ஜோவியலா பேசுவார். அபிஷேக் இப்படின்னா ஐஸ் கூட ஒர்க்
பண்றது வேற ரகம். அவங்கக் கூட வொர்க் பண்றது கஷ்டமா
இருந்திச்சு. காரணம் அவங்க உலக அழகி மட்டுமல்ல மக்கள்
உன்னிப்பா கவனிச்சுட்டு இருக்கிற ஒருத்தர். அதனால எனக்கு
அவங்க கூட சகஜமா இருக்க முடியலை, பழக முடியலை. ஏன்
கொஞ்சம் தயக்கமும் இருந்திச்சு. ஆனால் அவங்க தொழில்
ரீதியா நல்ல தெளிவா இருக்காங்க. ரொம்ப என்கரேஜிங்கா
இருப்பாங்க...''
ராவணன் படத்தின் மூலம் பாலிவுட்டுக்குப் போகும் விக்ரம்,
தொடர்ந்து ஹிந்திப்படங்களில் நடித்து பாலிவுட்டை ஒரு கை
பார்க்க விரும்புகிறாரா?
''அப்படி எல்லாம் எந்த எண்ணமுமில்லை. இங்கேயே எனக்கு முழு
சந்தோஷம் கிடைக்குது. தமிழில் பண்றது ரொம்ப வசதியா
சுலபமா இருக்கு. எனக்கு சாதகமான என் ஆடுகளமா இதை
நினைக்கிறேன். டைரக்டர் சொல்றார்னா அது என்னங்கிற புரிதல்
இங்கு அதிகமா இருக்குறதா நம்பறேன். அவர் ஏதோ சொல்றார்னா
அது என்னன்னு புரிஞ்சால்தானே நான் என பண்ணணும்கிறது
தெரியும். முதலில் நான் பேசுற வசனம் என்னன்னு எனக்கே
புரியாத மொழியில் நான் நடிக்க மாட்டேன். தமிழ் சினிமாவுல
நான் சந்தோஷமா இருக்கேன். சும்மா தமிழ்ல மட்டுமல்ல,
தென்னிந்தியாவில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகள்ல
கூட எனக்கு சந்தோஷம்தான். இதைவிட்டுவிட்டு ஹிந்திக்குப்
போகணும்னா... அது மணிரத்னம் சார் படமா இருக்கணும். அல்லது
ராகேஷ் மெஹீரா படமா இருக்கணும். இல்லைன்னா சஞ்சய் லீலா
பன்சாலி படமா இருக்கணும். தில் சாத்தா ஹை மாதிரி படமா
இருக்கணும்.''
என்கிற விக்ரமைப் பார்க்கும்போது நமக்கே ஆச்சர்யம். இவரா
பிதாமகன் படத்தில் நடித்தவர்? மிரட்டிய அன்னியனும், மிரண்ட
அம்பியும், ரெமோவும் இவரா? நடிக்கும் கதாபாத்திரமாக
எப்படி மாற முடிகிறது இவரால்?
''கேரக்டருக்குள் ஈஸியா நுழைஞ்சிடுவேன். அப்படி நுழைஞ்சு
நடிக்கிறதுதான் என் பாணின்னு சொல்லலாம். முதலில் அந்த
கேரக்டரின் தோற்றத்தை உடம்பில் கொண்டு வர விரும்புவேன்.
பிறகு நடிப்பு, தொடர்ந்து பல நாட்கள் ஷூட்டிங் இருந்தால்
இந்த ஈடுபாடு அதிகமாகி, அந்த கேரக்டரை நேசிக்க ஆரம்பிச்சு
ஒரு கட்டத்துல அதுவாவே மாறிடுவேன். ஒரு படத்துல காட்டு
மிராண்டி மாதிரி, மிருகம் மாதிரி நடிக்கிறேன்னு
வச்சிக்குங்க, அப்போ நானும் ஒரு மிருகமாவே மாறிடுவேன்.
உணர்ச்சியில்லாதவனா - மரத்துப் போயிடுவேன். பிதாமகன்ல
நடிச்சப்போ இப்படித்தான் இருந்தேன்.''
என்று சொல்லும் விக்ரமிடம் கேட்கிறோம்..
இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிற
ஆசை உண்டா?
''நான் ஆர்வமா இருக்கும் கேரக்டர் செல்வராகவன் படத்தில்
இருக்கு. அதைக் கேட்டது முதல் என்னால சும்மா இருக்க
முடியலை. மனசைக் குடைஞ்சுகிட்டே இருக்கு. படம் எப்ப
ஆரம்பிக்கப் போவுதுன்னு தெரியலை ஆனால் அதுவரைக்கும்
காத்துக்கிட்டிருக்க முடியாதுங்கற அளவுக்கு என்னை
பாதிச்சிருக்கு. தமிழ்சினிமா படிப்படியா எவ்வளவோ
வளர்ந்திருக்கு. பல விஷயங்களில் ஹிந்தி சினிமாவை விட
வளர்ந்து இருந்திச்சு. சமீப காலமா நாலஞ்சு வருஷமா ஹிந்தி
சினிமாவுல திடீர் மாற்றம். அதன் விஸ்வரூபம்
பெரிசாய்ட்டுது. வெளிநாட்டு முதலீடுகள்தான் இந்த
பிரமாண்டமான மாற்றத்துக்குக் காரணம்னு சொல்லலாம். இதனால
நமக்குக் கிடைக்க வேண்டிய பல பெருமைகள் ஹிந்திக்குப்
போய்க்கிட்டிருக்கு. நாம செய்ய வேண்டியதை அவங்க
செஞ்சுட்டு இருக்காங்க. நாம பாருங்க இன்னமும் சினிமாவுல
வயலன்ஸை மட்டுமே காட்டிக்கிட்டு இருக்கோம். மென்மையான
கதைகள்னா அது பட்ஜெட் படங்களா மட்டுமே இருக்கு.''
ஒரு சினிமார ரசிகனாக வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்
விக்ரம். அப்படி என்றால் விக்ரமுக்கு ஆக்ஷன் படங்கள்
பிடிக்காது என்று எடுத்துக் கொள்ளலாமா?
''எனக்கு மோதுறது, சண்டைபோடுறது, போரிடுறது எல்லாம்
பிடிச்ச விஷயங்கள்தான். ஆனா எதுக்காக அப்படிங்கறது
முக்கியம். நான் சாதாரண - மென்மையான காதல் கதைகளில் நடிக்க
விரும்புறதில்லை. அது என்னால் முடியாது. காதலி பின்னால்
சுற்றுவதே பிழைப்புங்கிற ரோலில் எனக்கு ஆர்வமில்லை.
அதுதான் என் பிரச்சனையா பார்க்கப்படுது. ஆனால் நான்
நினைக்கிறது வேற. நான் அடிக்கடி பார்க்கிற படங்கள்
ரொமான்டிக் - காமெடி படங்களா இருக்கிறது தவிர்க்க முடியாத
விஷயமா இருக்கிறது ஆச்சரியம். நான் ஒவ்வொரு அடியையும்
எச்சரிக்கையா எடுத்து வைக்கிறேன். படம் நடிக்கிறப்போ
ரெண்டு முக்கிய விஷயங்களில் பயணம் செய்ய ஆசை. நடிப்புத்
திறமையை வெளிப்படுத்துற மாதிரி வாய்ப்புள்ள படங்கள். இதில்
முழுக்க முழுக்க என் நடிப்புப் பசிக்கு தீனி போடனும்.
இன்னொண்ணு நான் நடிக்கிற கேரக்டர் ரொம்ப வலிமையா
மாறுபட்டதா இருக்கணும். நடிக்கவே வேணாம் என் தோற்றத்தை
பார்த்தாலே எல்லாம் புரியணும். அப்படி ஒரு பாத்திரப்
படைப்பு உள்ள படங்கள் வேணும்.''
நல்ல சினிமாவைப்பற்றி விக்ரம் இவ்வளவு
பேசுவதைப்பார்த்தால், சீக்கிரமே இயக்குநராகப் போகிறாரோ?
''எல்லா நடிகர்களுக்கும் ஒரு படத்துக்காவது கதை எழுதணும்,
டைரக்ட் பண்ணணும்கிற ஆசை இருக்கும். இன்னும் சில
வருஷங்களில், நான் கூட இது மாதிரி முயற்சியில் நிச்சயம்
இறங்குவேன். ஒரு வகையில் பார்த்தால் எல்லாருமே உதவி
இயக்குநர்கள் மாதிரிதான். மணிரத்னம், பாலா, ஷங்கர் கூட
வொர்க் பண்றப்போ நான் கூட மானசீகமா உதவி இயக்குநரா
இருப்பேன். டைரக்ஷன் ஆசை மனசுக்குள் எப்பவும் இருக்கும்.''
என்கிற விக்ரமிடம் கேட்கிறோம்..
நடிகருக்காக கதை, கதைக்காக நடிகர் உங்கள் விருப்பம் எது?
''நான் ஒரு முழுமையான நேர்த்தியான படத்துல நடிக்க
விரும்புறவன். அப்படிப்பட்ட படங்களும் வந்துட்டு இருக்கு.
சினிமா டைரக்டரின் மீடியம்தான். ஒரு டைரக்டர் விரும்புற
நடிக்கிற நடிகனா இருக்கவே எனக்கு ஆசை. இந்த கேரட்டருக்கு
விக்ரம்தான் சரிப்பட்டு வருவான். அந்த ஆளைவிட்டு வேற ஆள்
சரிவராதுன்னு அந்த டைரக்டருக்குத் தோணுனும். அப்படிப்பட்ட
படங்கள்ல நடிக்கவே எனக்கு விருப்பம்.''
இன்றைய தேதியிவ் வணிக மதிப்பு மிக்க நடிகர்களில் விக்ரம்
முக்கியமானவர். வெற்றிப் பயணத்தில் விரைந்துபோய்க்
கொண்டிருக்கும் விக்ரம் கடந்த காலத்தை திரும்பிப்
பார்ப்பதுண்டா?
''நிச்சயமா. நான் நிறைய கனவு கண்டதுண்டு. கண்ட கனவை விட
பெரிதாகப் பலித்ததும் உண்டு. ஆனால் இடையில் நீண்ட
போராட்டங்கள். வலிகள், ஏமாற்றங்கள், அவமானங்கள்.
அனைத்தையும் கடந்தே அந்தக் கனவுகள் மெய்ப்பட்டிருக்கு.
நான் வச்ச இலக்குப் புள்ளியையும் தாண்டி கடவுள் என்னைக்
கொண்டு போய் நிறுத்தயிருக்கார்.''
சினிமா, நட்சத்திரம், படப்பிடிப்பு இவற்றுக்கு அப்பால்
நீங்கள் எப்படி?
''ஸ்கிரீனுக்கு முன்னால் வேறு, பின்னால் வேறுங்கறதுல நான்
தெளிவா இருக்கேன். சினிமா, சினிமா சாராததுன்னு ரெண்டு
வெவ்வேறு மனுஷங்க எனக்குள் இருக்காங்க. நான், மனைவி,
குழந்தைங்கன்னு சின்னக் கூடு மாதிரி என் குடும்பம்.
வீட்டுக்குப் போய்ட்டா என் மொபைல் போன் ஆஃப் ஆய்டும்.
ஷூட்டிங்குக்குப் போட்டா வீட்டுல உள்ளவங்களால கூட என்னை
நெருங்க முடியாது. பெசன்ட் நகரில் எனக்கு சின்னதா அழகா ஒரு
வீடு இருக்கு. பெசன்ட் நகர்ல இருந்தா வீட்டுக்கு நடந்தே
போகப் பிடிக்கும். யாராவது என்னை அடையாளம் தெரிஞ்சு
ஆரவாரம் பண்ணுறது எனக்குப் பிடிக்கிறதில்லை. எனக்கு
பாதுகாவலா ஐந்து பேர் இருந்தாலும் வெளியில் ஜிம்முக்குப்
போறப்போ, டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போறப்போ, வீடியோஸ்
ஷாப் போறப்போ தனியாத்தான் போவேன். அதுதான் எனக்குப்
பிடிக்கும். என் சுதந்திரவெளி எனக்கு மட்டுமே
சொந்தமானது.''
என்று சொல்லும் விக்ரமுக்கு விக்ரமுக்கு கடவுள் நம்பிக்கை
உண்டாம் எந்தளவுக்கு?
''நான் முழுசா கடவுளை நம்புறவன். உனக்கு மூணு வரம்
தர்றேன்னு அவர் கேட்டால்... நான் மறுபடியும் நடிகர்
விக்ரமா பிறக்கணும். என் குடும்பம், ஃப்ரண்ட்ஸ் மறுபடியும்
இவங்களே வேணும். ஆனா எனக்கு இப்ப கிடைச்சிருக்கிற சக்சஸ்
சந்தோஷம் இவ்வளவு காலங்கள், கஷ்டங்கள்,
போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்காம, சீக்கிரமே
கிடைக்கணும்னுதான் வரம் கேட்பேன்.''
more pictures
|