|
ஆறுபடை பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் கிராமிய படம் கரிசல்மண். காவிரிப்
படுகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும்
படம் இது. சில வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை சம்பந்தப்பட்டவர்களே
நேரில் பார்க்க, சம்பவங்கள் நடந்த தஞ்சை மாவட்டப் பகுதிகளிலேயே படப்பிடிப்பை
நடத்தியுள்ளனர்.
அண்ணன் தம்பி இருவரும் ஒரு பெண்ணின் சூழ்ச்சியால் பிரிந்து, காசு வெட்டிப் போட்டு
முறைப்பாடு செய்து கொள்கின்றனர். குடும்பம் பிரிய, ஊர் பிரிகிறது. அண்ணன் வீட்டில்
ஆறு மாதமும், தம்பி வீட்டில் ஆறு மாதமும் அம்மாவுடன்
தங்கும் தங்கை, இருவரையும்
சேர்த்து வைக்க, ஊர் ஒன்றுபட நடத்தும் பாசப் போராட்டமே கிரிசல்மண்.
சரண்ராஜ், தமிழ்ச்செல்வன் என்ற பாத்திரத்தில் முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ளார்.
கணவனை இழந்த பிறகும், பூவுடனும் பொட்டுடனும் வாழும் புதுமை கிராமத்துத் தாயாக
வாழ்ந்துள்ளார் வடிவுக்கரசி. கரகாட்டக்காரியாக லாவண்யா நடித்துள்ளார்.
புதுக்கோட்டை, கீரமங்கலம் அருகே கொடிகறம்பை கிராமத்தில் 20 ஏக்கர் நிலத்தில்
சோளம் பயிரிட்டு, மூன்று மாதங்கள் காத்திருந்து காதல் காட்சியையும், பாடல்
காட்சியையும் எடுத்து வந்துள்ளனர். 25 லட்சம் செலவில் மிகப் பெரிய ஆடு, மாடு, கோழி
சந்தை செட் அமைத்து பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். தஞ்சை
மாவட்டம் ரெட்டை வயல் கிராமத்தில் ஒரே கல்லில் ஆன
முருகன், வள்ளி, தெய்வானை
கோவிலில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாக்க முக்க பாடல் பாடிய தஞ்சை சின்னபொண்ணு, ரெட்டவயல் ரொட்டை சடை சிங்காரி எனத்
தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடலை இளையகம்பன் எழுதியுள்ளார்.
சரண்ராஜ் ஜோடியாக கரகாட்டக்காரியாக லாவண்யா, புதுமுகம் கிருஷ்ணா ஜோடியாக கல்லூரி
மாணவி புவனேஸ்வரி, வடிவுக்கரசி, எழில், புதுமுகங்கள் பைந்தமிழ்ச்செல்வன்,
சுப.தமிழ்வாணன், மருதூர் சௌந்தர்ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுப.தமிழ்வாணன் இயக்குகிறார். இவர் இயக்குநர் சீமானின்
உதவியாளர். ஒளிப்பதிவை ஜே.மோகன் கையாள, யானிதேஷ் இசையமைக்கிறார். இரா.செல்வராஜ்
எடிட்டிங்கில், ஸ்ரீ.ஜி. அனில் கலையை நிர்மாணிக்க, ஆர்.கே. முரளி சண்டைப் பயிற்சி
அளிக்கிறார். இளைய கம்பன், மரபின் மைந்தன் முத்தையா, சுப்பிரமணிய நந்தி,
குகை.புகழேந்தி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சிறுகனூர் ஜி.பைந்தமிழ்ச் செல்வன்,
கேப்டன் சி.ஆர்.நீலகண்டன், ஜி.வி. சாமி, மருதூர் சௌந்தர்ராஜன் ஆகிய நால்வரும்
இணைந்து கரிசல்மண் படத்தை தயாரிக்கிறார்கள். |