|
வளர்ச்சியா? வீக்கமா? தெரியவில்லை! ஆனால் வாரத்துக்கு
குறைந்தபட்சம் மூன்று படங்களாவது வெளியாகிக்
கொண்டிருக்கின்றன. அவற்றில் புதுமுகங்கள் நடித்த
படங்கள்தான் அதிகம். ஆனாலும் எந்த முகமும் நினைவில் இல்லை.
விதிவிலக்காக ஒன்றிரண்டு புதுமுகங்களே நினைவில்
நிற்பதோடு, தொடர்ந்து பட வாய்ப்பையும் பெருகின்றனர்.
அவர்களில் 'நாடோடிகள்' படத்தின் அறிமுக நாயகி அனன்யா
முக்கியமானவர். அவரது முதல் படம் மிகப்பெரிய வெற்றியை
அறுவடை செய்ய, அனன்யா செல்லுமிடமெல்லாம் ஆர்ப்பரிக்கிறது
ரசிகர்களின் கூட்டம்.
நாடோடிகள் படத்தின் வெற்றியினால் அனன்யாவுக்கு
தம்ழ்த்திரையுலகில் சிவப்புக்கம்பள வரவேற்பு
வசப்பட்டாலும், அதை அவர் முழுமையாக பயன்படுத்திக்
கொள்ளவில்லை. தேடி வருகிற பட வாய்ப்புகளுக்கு
தலையாட்டாமல் அநியாயத்துக்கு அலைக்கழிக்கிறாராம்.
ஏன் அனன்யா இப்படி?
'எல்லா படங்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நான்
ஆசைப்படவில்லை. ஒரு படத்தில் நடித்தாலும் அது நாலு பேர்
பாராட்டுகிற படமாக இருக்க வேண்டும். நான் மலையாளத்தில்
நடித்த பாசிட்டிவ் படத்தை அடுத்து ஒன்றரை வருஷம்
கழித்துதான் நாடோடிகள் படத்தை ஒப்புக் கொண்டேன்.
இப்போது தெலுங்கில் '23 டி' என்ற படத்திலும்,
மலையாளத்தில் கே.மது டைரக்ஷனில் 'ரகசிய போலீஸ்' என்ற
படத்திலும் நடிக்கிறேன். இவற்றை முடித்துவிட்டுத்தான்
புதுப்படங்களை ஒப்புக்கொள்வதாக இருக்கிறேன். அது
மட்டுமல்ல, நல்ல கதையாக, வெற்றியடைகிற படமாக இருந்தால்தான்
நான் நடிக்கவே ஒப்புக்கொள்வேன். பணத்துக்காக கண்ட
படங்களையும் ஒப்புக் கொள்ள மாட்டேன். இந்த விஷயத்தில்
நான் உறுதியாக இருக்கிறேன்''
ஒன்றிரண்டு படங்களில்தான் நடித்திருக்கிறீர்கள். இதுதான்
வெற்றியடைகிற கதை என்று தீர்மானிக்கிற அளவுக்கு உங்களுக்கு
ஸ்டோரிநாலெட்ஜ் இருப்பதாக நினைக்கிறீர்களா?

''நான் அப்படி சொல்லவில்லை. இதுதான் வெற்றியடையும் என்று
யாராலும் சொல்ல முடியாது. ஆனாலும், என்னுடைய அப்பா
பி.என்.கோபால கிருஷ்ணன் நாயர், அம்மா பிரசிதா நாயர்,
தம்பி அர்ஜுன் எல்லாம் உட்கார்ந்துதான் கதை கேட்போம்.
அவங்க எல்லாருக்கும் பிடித்திருக்கிற மாதிரி கதையா
இருந்தால்தான் நடிக்க ஓ.கே சொல்வேன்.''
ஒரு படத்தை ஒப்புக் கொள்வதற்கு இத்தனை கண்டிஷன் போடும்
நீங்கள், ரகசியபோலீஸ் மலையாளப்படத்தில் தனிக்கதாநாயகி
இல்லையாமே?
''ஆமாம். அந்தப்படத்தில் நான்கு ஹீரோயின்களில்
ஒருத்தியாகத்தான் நடிக்கிறேன். அதை நான் மறைக்கவில்லை.
அதற்காக எனக்கு வருத்தமும் இல்லை. ஏனென்றால் நான் ஒரு
சீனில் மட்டுமே வந்தாலும், எனது பெயர் சொல்லுகிற மாதிரி
அந்த கேரக்டர் இருக்கும். ஒரு வேடிக்கையான ஒற்றுமை
என்னவென்றால் நான் நடித்து வரும் இரண்டு படங்களுமே
இன்வெஸ்ட்டிகேட்டிங்கை
அடிப்படையாக கொண்ட கதைகள்தான்.''
நாடோடிகள் படத்துக்குப் பிறகு மேலும்
குண்டாகிவிட்டீர்களே? தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு குண்டான
நடிகைகளைப் பிடிக்கும். என்பதால் நொறுக்குத்தீனி தின்று
தின்று மேலும் குண்டாகி விட்டீர்கள் போலிருக்கிறதே?
''ஷூட்டிங்கின்போது நிறைய சாப்பிட்டு சாப்பிட்டு
குண்டாகினேன் என்பது உண்மைதான். ஆனால், அடிப்படையில்
எனக்கு அப்படி தின்கிற பழக்கம் இல்லை. கொஞ்சம் டயட்டில்
இருந்து உடம்பை குறைக்கலாமா என்று யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.''
நாடோடிகள் படத்தில் உங்களுக்கு ஜோடியாக நடித்த சசிகுமாரை
நிஜத்திலும் மாமா என்றுதான் அழைக்கிறீர்களாமே?
உங்களிருவருக்கும் காதல் என்றும் சொல்கிறார்களே, நிஜமா?
''ஐயய்யோ... இப்படியெல்லாம் கூட கதை கட்டி விடுகிறார்களா
என்ன? நான் யாரை பார்த்தாலும் சேட்டா என்றுதான் அழைப்பேன்.
மலையாளத்தில் சேட்டா என்றால் அண்ணா என்று அர்த்தம்.
சசிகுமாரையும் சேட்டா என்றுதான் அழைக்கிறேன். நாடோடிகள்
படத்தில் எனக்கு ஜோடியாக நடித்தவர் என்பதைத்தாண்டி
அவருக்கும் எனக்கும் தனிப்பட்டமுறையில் எந்தவொரு உறவும்
இல்லை.''
பெரிய வெற்றி கிடைக்கும்போது அதை பயன்படுத்தி நான்கைந்து
படங்களை ஒப்புக் கொள்வதுதான் நட்சத்திரங்களின் பொதுவான
இயல்பு. நாடோடிகள் இத்தனை பெரிய வெற்றியடைந்தும் நீங்கள்
இன்னும் ஒரு தமிழ் படம் கூட ஒப்புக் கொள்ளவில்லை,
தமிழ்நாடு வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?

''சத்தியமாக இல்லை. எனக்கு தமிழ்மக்கள் கொடுத்திருக்கிற
வரவேற்பைப் பார்த்து சந்தோஷத்தில் வானத்தில் பறந்து
கொண்டிருக்கிறேன். கேரளாவுக்குப் போனாலும்
தமிழ்நாட்டிலிருக்கிற என்னுடைய தோழிகள் எனக்கு போன்
செய்து சொல்கிறார்கள். இத்தனை வரவேற்பு
கிடைத்திரக்கும்போது தமிழ்நாடு வேண்டாம் என்று சொல்வேனா
என்ன? நல்ல கதையாக அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்
அவ்வளவுதான். நான் நடிக்கும் தமிழ்ப்படங்கள் பற்றி. கூடிய
சீக்கிரம் அறிவிப்பு வரும் பாருங்கள்.''
|