|

கென் மீடியா எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற புதிய பட நிறுவனம் நிறைந்த பொருட்செலவில்
மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம் அம்பாசமுத்திரம் அம்பானி.
திண்டுக்கல் சாரதி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு கருணாஸ் கதாநாயகனாக
நடிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பி.ராம்நாத்.
கருணாஸ் நடித்த பல படங்களின் காமெடி டிராக் உருவாக்கத்தில் கருணாஸிடம் உதவியாளராக
இருந்த இவர் பிரியம் பாண்டியன் இயக்கி வரும் 365 காதல் கடிதங்கள் என்ற படத்தில் இணை
இயக்குநராக பணியாற்றியவர். தவிர கருணாஸ் நடித்த திண்டுக்கல் சாரதி படத்திற்கு வசனம்
எழுதியவர். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அரசாங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்னீத்கவுர் அம்பாசமுத்திரம் அம்பானி
படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் கோட்டாசீனிவாசராவ், லிவிங்ஸ்டன்,
வி.எம்.சி.ஹனீபா, மயில்சாமி, ஸ்ரீரஞ்சனி, சிந்தியா, நிரோஷா ஆகியோரும்
நடிக்கிறார்கள்.
அம்பாசமுத்திரத்தில் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் உலகமே அண்ணாந்து
பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைக்கிறான். உலகளாவிய
அளவுக்கு கனவு காணும் அவன், தன் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு
வருகிறான். அவனது கனவு நனவானதா.. இல்லையா என்பதே அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின்
கதை.

ஒவ்வொரு இளைஞனுக்கும் தன்னம்பிக்கையை தருகிற படமாகவும், உழைப்பின் மகத்துவத்தை
சொல்கிற படமாகவும் இருக்கும் - என்கிற இயக்குநர் ராம்நாத் தொடர்ந்து சொல்கிறார்..
‘’கடினமாக உழைத்தால் கண்டிப்பாக பலன் உண்டு. உழைப்புக்கு உடனடிப்பலன்
இல்லாவிட்டாலும் மறைமுகமான மதிப்பு இருக்கும் என்ற அழுத்தமான கருத்தை சொல்லும்
கதையாக இருந்தாலும் இயல்பான நகைச்சுவையோடு கதை சொல்லி இருக்கிறேன். பாக்யராஜ் ஸார்
படங்கள் மாதிரி இந்தப்படத்திலும் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிற வகையில்
சென்ட்டிமெண்ட் இருக்கும்.’’
காலையில் சீக்கிரம் எழுந்து இரவில் தாமதமாக படுக்குமளவுக்கு சதா நேரமும் உழைக்கும்
தண்டபாணி என்ற வேடத்தில் கருணாஸ் நடித்திருக்கிறார். அவருக்கு இன்னொரு பரிமாணத்தைக்
கொடுக்கும் படமாக அம்பாசமுத்திரம் அம்பானி அமையும் என்றும் சொல்கிறார் இயக்குநர்.
750 துணை நடிகர் நடிகைகளுடன் கருணாஸின் அம்மாவாக நடிக்கும் சிந்தியா பங்கு பெற்ற
காட்சி சமீபத்தில் அம்பாசமுத்திரத்தில் படமாக்கப்பட்டது. மழைப்பின்னணியில்
படமாக்கப்பட்ட இந்த காட்சி பேசப்படும் வகையில் அமைந்திருக்கிறது.
இணை இயக்கம்: ரே.குமரன்
ஒளிப்பதிவு: புலித்தேவன். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்திடம் பல படங்களில்
இணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக
அறிமுகமாகிறார். பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து. இசை: கருணாஸ். ராஜாதிராஜா
படத்துக்கு இசையமைத்த கருணாஸ், அப்படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய
வரவேற்பைத்தொடர்ந்து இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார். கலை: சுரா, நடனம்: தினேஷ்,
சண்டைப்பயிற்சி: சூப்பர் சுப்பராயன், படத்தொகுப்பு: வி.டி.விஜயன், தயாரிப்பு
மேற்பார்வை: நாராயணன்
தயாரிப்பு: கென் மீடியா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: பி.ராம்நாத்.
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் வசனக்காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டநிலையில்
பாடல் காட்சிகள் விரைவில் படமாக இருக்கிறது.
|