|
|
நேற்று சிம்ரன்
இன்று தமன்னா
நாளை அனுஷ்கா
தமிழ்ரசிகர்களின் கனவுக்கன்னிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். கடந்த காலங்களில்
குஷ்பூவும், சிம்ரனும், ஜோதிகாவும், அசினும் வீற்றிருந்த இடத்தில் இப்போது
இருப்பவர் தமன்னா! இந்த இடம் நாளை யாருக்கு என்ற கேள்விக்கு விடை...அனுஷ்கா!
ரெண்டு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர்தான் இந்த அனுஷ்கா. ஆனாலும் அவரை
பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றது அருந்ததீ படம்தான். தெலுங்குப்படமான இது,
தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானாலும். நேரடிப்படங்களுக்கு நிகராக பல
கோடிகளை வசூல் செய்தது. அது மட்டுமல்ல, தெலுங்கில் பிசியான நடிகையாக வரம் வரும்
அனுஷ்காவுக்கு தமிழ்நாட்டில் ரசிக எண்ணிக்கையையும் அதிகப்படுத்திவிட்டது. இதன் மூலம்
அனுஷ்கா மீண்டும் தமிழில் ரவுண்ட் வரத் தொடங்கிவிட்டார். விஜய் ஜோடியாக
வேட்டைக்காரன் படத்தில் நடித்து வரும் அனுஷ்காவுக்கு மேலும் பட வாய்ப்புகள்
குவிகின்றன.
மீண்டும் தமிழ்ப்பிரவேசம் நிகழ்ந்தது பற்றி அனுஷ்காவிடம் கேட்டோம்...
''தமிழில் 'ரெண்டு' படத்தில் நடித்தேன். அதன் பின் தெலுங்கில் பிசியாகிவிட்டதால்
மறுபடி தமிழில் படங்களை ஏற்க முடியவில்லை. என்றாலும் அடிக்கடி தமிழில் நடிக்க
அழைப்பு வந்து கொண்டுதான் இருந்தது. இப்போதுதான் மறுபடி தமிழில் நடிக்க நேரம்
கிடைத்திருக்கிறது. இனி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே கவனம் செலுத்தலாம் என்று
திட்டமிட்டிருக்கிறேன். 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேன்.
அடுத்து கார்த்தி ஜோடியாக 'சிறுத்தை' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன்.''
தமிழில் நம்பர் ஒன்னாக வேண்டும் என்ற ஆசையிருக்கிறதா?
''நிச்சயமாக. எல்லோருக்குமே அப்படியொரு ஆசை இருக்கும். எனக்கும் அதுதான்
நோக்கமாக இருக்கும். சீக்கிரமே தமிழில் முன்னணி இடத்தைப் பிடிப்பேன்.''
வேட்டைக்காரன் படத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
''விஜய் சிறந்த நடிகர், நன்றாக நடனம் ஆடக்கூடியவர் என்பதை அவருடன் நடிக்கும்போது
புரிந்து கொண்டேன். அவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே
ரெண்டு படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான என்னை அருந்ததீ படம் இன்னும்
பிரபலபடுத்தி இருக்கிறது. இந்தப் படம் பெண்களையும், குழந்தைகளையும் என் பக்கம்
திருப்பி இருக்கிறது. வேட்டைக்காரன் படம் மூலம் இளைஞர்களையும் கவர்வேன் என்ற
நம்பிக்கை இருக்கிறது.''
வேட்டைக்காரன் படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?
மருத்துவ கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கிறேன். அதற்கு மேல் எதையும் கேட்காதீர்கள்.
கதையையோ மற்ற விஷயங்களையோ இப்போதைக்கு சொல்லக் கூடாது. படம் வெளியான பிறகு அதில்
நடித்த அனுபவத்தை சொன்னால்தான் நல்லா இருக்கும். அதுவரை பொறுத்திருங்கள்.''
அருந்ததி இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைத்தீர்களா?
''உண்மையிலேயே நினைக்கவில்லை. அருந்ததி ரில¦ஸ் ஆகி பெரிய ஹிட்டானதாக எனக்கு தகவல்
கிடைத்தபோது நான் தெலுங்கு பில்லா படத்துக்காக மலேசியா போயிருந்தேன். எனக்கு
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஹைதராபாத் திரும்பியதும் ரசிகர்களோடு அமர்ந்து
அருந்ததி படத்தைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதே மாதிரி, ரெண்டு தடவை
அவர்களோடு அமர்ந்து பார்த்து ரசித்தேன். நான் படம் பார்ப்பது முதலில் ரசிகர்களுக்கு
தெரியாது. முதல் தடவை பார்க்கும்போது எடிட்டிங், பின்னணி இசை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்,
டைரக்ஷன் மற்றும் டெக்னிக்கல் விஷயங்களை கூர்ந்து கவனிச்சு ரசிச்சேன். ரெண்டாவது
தடவை பார்க்கும்போதுதான் ரசிகர்களோட ரியாக்ஷனை கவனிச்சேன். குண்டு ஊசி
விழுந்தால்கூட பெரிய சத்தம் கேட்கும். அந்த அளவுக்கு தியேட்டரில் அமைதி. அவங்களை
கட்டிப் போட்டுவிட்டது படம். எண்ட் கார்ட் போட்ட பிறகும், எழுந்து போக
மனமில்லாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தாங்க.
என்னைப் பார்த்தவங்க அருந்ததி,
அருந்ததின்னு என் கையைப் பிடிச்சிக்கிட்டாங்க. அந்த கேரக்டர் மேல அவங்க வச்சிருந்த
மரியாதையை புரிஞ்சிக்க முடிஞ்சது. ரசிகர்களுக்கு என் நிஜப் பெயரே ஞாபகத்துக்கு வரலை.
அந்த அளவுக்கு என் பெயரையே மறக்கடிச்சிடிச்சு அருந்ததி கேரக்டர்.''
அருந்ததி படத்திற்காக பதினைந்து கிலோ நகை அணிந்து நடித்தீர்களாமே?
''ஆமாம். எனக்கு நகைகள் போடுவதே பிடிக்காது. ஆனா இவ்வளவு நகைகளை மாட்டிக்கொண்டு
நடிச்சதை நினைச்சாலே, எனக்கு இன்னும் சிரிப்பா இருக்கு. அதை அணிந்தபோது உடம்பில்
கீறி, காயம் ஏற்பட்டது. அந்த காயம் எல்லாம் படத்தை பார்க்கிறபோது மறைஞ்சிடுச்சி.
இப்போ அது எனக்கு சுகமான அனுபவமாகத்தான் தெரிகிறது. எனக்கு அந்த நகைகளைப் போட்டு
முதல்ல ஃபோட்டோ செஷன் பண்ணினாங்க. என் அம்மாவிடம் காட்டியபோது, அவங்க அதை
பார்த்துட்டு சிரிச்சாங்க. ஏன்னா, எங்க அம்மா சொன்னபோதெல்லாம் நான் எந்த நகையையும்
போட்டுக்கிட்டது இல்லை. ஆனா அவங்க என்னை அப்படிப் பார்க்க ஆசைப்பட்டதை டைரக்டர்
செய்ய வச்சிட்டார்.''
அருந்ததி படத்தின் இரண்டாவது பாகம் எடுத்தால் நடிப்பீர்களா?
''கண்டிப்பா! இந்த டீம் வேற படம் பண்ணினாலும் நான் நடிப்பேன். படத்துல எனக்கு
கிடைத்த மரியாதை, என் வளர்ச்சிக்கு பெரிய உதவியா இருக்கு. சின்னஊர்கள்ல கூட நூறு
நாட்கள் ஓடியிருக்கு.''
அந்தப்படத்தை பார்த்துவிட்டு முதலில் பாராட்டியது யார்? மறக்க முடியாத பாராட்டு எது?
''என்னோட அப்பாதான். அவர் படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே என்னை கட்டிப்
பிடிச்சிகிட்டார். அவருக்கு பேச வார்த்தையே வரலை. அவர் பார்வையில் பாராட்டும்,
மகிழ்ச்சியும் எவ்வளவு அழுத்தமா இருந்தது தெரியுமா? அதுமாதிரி தயாரிப்பாளர் ஷ்யாம்
பிரசாத் ரெட்டி. எனக்கு தெரிஞ்சி அவர் சிரிச்சி நான் பார்த்ததே இல்லை. ஆனால் படம்
பார்த்துட்டு ஃபோன்ல மனம்விட்டு சிரிச்சி பேசினார். அதை நான் பெரிய விஷயமா
நினைக்கிறேன்.''
உங்கள் அழகின் ரகசியம் என்ன?
நிறைய தண்ணீர் குடிப்பேன். இரவு எட்டு மணிக்கு மேல சாப்பிட மாட்டேன். பெரும்பாலும்
பாசிட்டிவ்வான எண்ணங்கள்தான் மைண்ட்ல இருக்கும். தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பேன்.''
|