|
மாத்தியோசி
ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின் கதை படத்துக்கு பிறகு, இயக்குநர் நந்தா பெரியசாமி
எழுதி இயக்கும் புதிய படம் மாத்தியோசி. இத்திரைப்படத்தை பிஎஸ்எஸ் ஆர் பிலிம்ஸ்
சார்பில் பி.எஸ்.சேகர் ரெட்டி தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே அம்முவாகிய நான் என்ற
படத்தை தயாரித்தவர்.
கதை நாயகர்களாக ஹரீஷ், அலெக்ஸ், கோபால், விசாக் என நான்கு புதிய முகங்கள் நடிக்க,
கதையின் நாயகியாக ஷாம்மு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகர்களாக அறிமுகமாகும்,
ஹரீஸ், அலெக்ஸ், கோபால், விசாக் ஆகிய நால்வருக்கும் சுமார் அறுபது நாட்கள்
நடிப்புப் பயிற்சி வழங்கப்பட்டு, முப்பது நாட்கள் வீடியோ கேமராவில் அவர்களை
டெஸ்ட்ஷூட் செய்து, இயக்குநர் நந்தாபெரியசாமிக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே பட
வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
அது என்னங்க மாத்தியோசி? என்று இயக்குநரிடம் கேட்டால்,
'இப்போ, இந்த நிமிடம் நியூஸ் பேப்பரைப்பார்த்தா நிறைய குற்றங்களுக்கு சின்னப்
பசங்கதான் தலைகுனிஞ்சு நின்னுக்கிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறாங்க. இது
போல உள்ள ஐந்நூறுக்கும் மேற்பட்ட பேப்பர் கட்டிங்குகளை நானே சேகரிச்சு
வச்சிருக்கேன். அப்படி தப்பு செஞ்ச பசங்க சில பேர்களுடையக் கதையைக் கேட்டு உணர்ந்து
உருவாக்கின கதைதான் மாத்தியோசி. கதைப்படி, நான்கு கதை நாயகர்களும் ஒரு கிராமத்தில்
சிறு சிறு தவறுகளை செய்து கொண்டிருக்கும் ரெண்டுங்கெட்டான் வயசுப்பசங்க. ஒரு
கட்டத்தில் ஊரில் ஒரு மிகப் பெரிய பிரச்சனை பண்ணிவிட, ஊரிலிருந்து தப்பித்து
சென்னைக்கு செல்கின்றனர். சென்னைக்கு சென்ற அந்த நான்கு இளைஞர்களும் என்ன ஆனார்கள்
என்பதுதான் மீதி கதை.' என்று கதைச்சுருக்கம் சொல்கிறார் நந்தா பெரியசாமி.
இப்படத்துக்கு விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்ய, குரு கல்யாண் என்பவர்
இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
மாத்தியோசி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை மதுரையில் ஒரு மாதம் முடித்துவிட்டு,
அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. ஆனால், படத்தின் கதைக்களம் மிகவும் புதுமையாகவும், இதுவரை யாரும்
சொல்லாத ஒரு களமாகவும் இருக்கும் என்கிற இயக்குநர், 'கதாநாயகி ஷம்முவுக்கும்,
நான்கு கதாநாயகர்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்படுகிறது என்பதை அழகிய கவிதை போல்
சொல்லி இருக்கிறேன்.' என்றும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
எப்படியோ தலைப்புக்கு ஏற்றதுபோல் கதைவிஷயத்தில் இயக்குநர் மாத்தியோசித்திருந்தால்
சரி. |