|
மௌனகீதங்கள், மைடியர் குட்டிசாத்தான் உட்பட சுமார் 215 படங்களில் குழந்தை
நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றவர் மாஸ்டர் சுரேஷ். 1983ம் ஆண்டில் 'மலமுகளிலே
தெய்வம்' என்ற மலையாளப்படத்திலும், 1984ம் ஆண்டு 'மைடியர் குட்டிச்சாத்தான்'
படத்திலும் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப்
பெற்ற மாஸ்டர் சுரேஷ்தான் இப்போது இயக்குநர் சூரியகிரண்!
நாகார்ஜூனா தயாரித்த சத்யம், எம்.எல்.குமார் சௌத்ரி தயாரித்த தனா 51, சூர்யா
பத்திரிகையின் நிறுவனர் சூர்யபிரகாஷ்ராவ் தயாரித்து ஜெகபதிபாபு நடித்த
பிரம்மமாஸ்திரம், மோகன்பாபு தயாரிப்பில் அவர் மகன் மனோஜ் நடித்த ராஜூபாய் (சித்திரம்
பேசுதடி படத்தின் தெலுங்கு ரீமேக்) போன்ற தெலுங்கு படங்களை இயக்கிய சூரியகிரண்
அப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் வெற்றிப்பட இயக்குநர்.
தெலுங்கில் தொடர் வெற்றிகளைப் பெற்றதன் மூலம் அடுத்து டாக்டர் ராஜசேகர் நடிப்பில்
ஆச்சார்யா என்ற படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் சூரியகிரண், முதன்
முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்குகிறார்.
படத்தின் பெயர்: அத்தியாயம் 6.
இப்படத்தில் புதுமுகம் ஹரிநாத் கதாநாயகனாக நடிக்க, இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார்
பாலா. இவர்களுடன் காவேரி, சோனியாசூரி, கோட்டா சீனிவாசராவ், ராஜன்.பி., தேவ், காதல்
தண்டபாணி, எம்.எஸ்.பாஸ்கர், சுமன்ஷெட்டி, மாஸ்டர் கணேஷ் உட்பட மேலும் பலர்
நடிக்கின்றனர்.
பி.சித்திரைச்செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் கதையை அத்தியாயம்
அத்தியாயமாக ஆறு அத்தியாயமாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் சூரியகிரண். அதற்கு
தகுந்தார் போல, ஆறு அத்தியாயத்திற்கும் ஆறு நிறத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார்
சித்திரைச்செல்வன்.
இப்படத்திற்கு மோகன் சித்தாரா, அற்புதன், பி.சி.சிவன் என மூன்று பேர்
இசையமைக்கின்றனர். படத்தொகுப்பு - கௌதம் ராஜு, நடனம் - சங்கர், அசோக்ராஜ், சண்டை
பயிற்சி - கணேஷ், நந்து.
இப்படத்தின் படப்பிடிப்பு சிக்கிம், அசாம், மேகாலயா, விசாகப்பட்டினம், ஹைதராபாத்,
சென்னை போன்ற இடங்களில் நடந்துள்ளது. இதன் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு
பாண்டிச்சேரி, மூணாறு, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது.
மிகப் பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை மிடாஸ் டச் நிறுவனம் சார்பில், காசி,
சமுத்திரம், உட்பட பல படங்களில் நடித்த நடிகை காவேரி தயாரிக்கிறார். தன் காதல் பணவர்
சூரியகிரணுக்காக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் காவேரி.
|