யதார்த்தமான, வித்தியசமான கதைகள் நிச்சயம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையோடு
தயாராகும் படம் வர்ணம். இதுவரை தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும்
ஒரு புதிய கதைக்களம்தான் வர்ணம்.
இத்திரைப்படத்தின் தலைப்புக்கேற்பப் பல அர்த்தங்களைச் சொல்லலாம். வாழ்க்கையில்
அற்புதமான பருவம்தான் இளமைக் காலம். அதிலும் பதினாறு வயது முதல் இருபது வயது வரை ஒரு
மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் மாறுதல்கள் வண்ணமயமானவை. வர்ணம் படத்தின் நாயகன்
மணியும் (கிரி) அப்படிப்பட்ட ஒரு வண்ணமயமான சூழலைக் கடக்கும்போது அவனுக்கும் நேரும்
யாருமே யூகிக்க முடியாத இனிமையான அனுபவங்கள் நிகழும் அதே கால கட்டத்தில், வர்ணாஸ்ரம
அமைப்பு தரும் அதிர்ச்சிகளும், அவனுடைய கனவுகள் எப்படியெல்லாம் திசை மாறிப்
பயணிக்கிறது என்பதையும் சுவாரஸ்யமாக விவரிக்கிறது வர்ணம்.
மணி தன் சொந்த கிராமமான கரிசல் பூமியில் நடந்த ஒரு சாதிக்கலவரத்தில் தன் தந்தையை
இழக்கிறான். தந்தையை இழந்தாலும் இயல்பான குறும்புத்தனத்தைக் கொண்ட அவனுடைய
தொல்லைகளைத் தாங்க முடியாத அம்மா, அவனை மாமாவின் ஊருக்கு படிப்பதற்காக அனுப்பி
வைக்கிறாள். அங்கே முற்றிலும் புதிதான ஒரு வாழ்க்கை. காபி எஸ்டேட், பனிமலைகள்,
குளிர், அழகான பெண்கள், புதிய நண்பர்கள் என்று மணியின் வாழ்க்கை வேறொரு தளத்துக்கு
மாறுகிறது. சாதி, அந்தஸ்து, மரியாதை என்று எல்லா விதங்களிலும் தன்னுடைய மாமா
துரையின் ஆளுமையைக் கண்டு வியக்கிறான் மணி. அவரைப் போலவே தானும் ஆக வேண்டும்
என்றும் கனவு காண்கிறான்.
மாமா நடத்தும் பள்ளியில் பாடம் நடத்தும் அழகான டீச்சரின் (மோனிகா) நட்பு, சக
வகுப்புத் தோழியான தங்கத்தின் (அஷ்வதா) மீதான காதல், நண்பர்களுடன் அடிக்கும்
கும்மாளம் என்று அவன் ஒரு இனிய பயணத்தில் மிதக்கும்போதுதான் அவன் சற்றும்
எதிர்பாராத, அவனுடைய அடிப்படை நம்பிக்கைகளையே தடம் புரள வைக்கும் சம்பவங்கள்
நடக்கின்றன.
மணிக்கு நேரும் அந்த அதிர்ச்சிகள் படம் பார்ப்பவர்களையும் அதிர வைக்கும்.
தமிழ்நாட்டையே அதிர வைத்த ஒரு சம்பவம் வர்ணத்தில் ஒரு முக்கிய காட்சியாக இடம்
பெற்றிருக்கிறது.
யாருமே சொல்ல பயப்படும், எஸ்டேட்டில் உள்ள மர்மமான முனியாண்டி எல்லைக்கோயிலில் மணி
ஒரு முறை உள்ளே செல்ல நேர்கிறது... அங்கே அவன் காணும் ஒரு காட்சியில் உறைந்து போய்
நிற்கிறான்.
அதன் பின் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மணியைத் திக்கு முக்காட வைக்கின்றன.
அவன் அன்பு வைத்த தங்கத்துக்கு நேரும் அவலம், மாமாவின் நிஜ முகம் காட்டும் அதிர்ச்சி
எல்லாமே அவனை கலங்க வைக்கின்றன. ஒரு முக்கியமான கட்டத்தில் அவன் எடுக்கப் போகும்
முடிவுதான் கிளைமாக்ஸ். அதற்கான தன்னுடைய உயிரையே கூட அவன் பணயம் வைக்கக் கூடிய
கட்டம் அது.
கொடைக்கானல் மலைகளில் இதுவரை பொது மக்கள் கூட அறியாத ஒரு நீர்வீழ்ச்சியில்
படமாக்கப்பட்டிருக்கிறது இந்த கிளைமாக்ஸ் காட்சி.
சூப்பர் 16 டெக்னிக்கில் படமாக்கப்பட்டுள்ள வர்ணம் படத்தின் படப்பிடிப்பு
கொடைக்கானல், மூணாறு போன்ற மலைப் பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கிறது.
திண்டுக்கல்
மலைக்கோட்டையில் இதுவரை எந்தப் படப்பிடிப்புக்கும் அனுமதி கிடைத்ததில்லை. வர்ணம்
படத்தின் முக்கியமான காட்சிகள் அந்த மலைக்கோட்டையில் படம் பிடிக்கப்பட்டன. மிஸான்
என்று சொல்லப்படும் ஒரே ஷாட்டில் ஒரு முழு பாடலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 400 வருடங்கள் பழமையானது என்று சொல்லப்படும் முனியாண்டி என்கிற சிறு
தெய்வத்தின் கதை ஒரு பாடலுக்காக சொல்லப்படுகிறது. ஒரு திருவிழா சம்பந்தப்பட்ட
பாடலுக்காக வீரபாண்டியில் நடைபெறும் நிஜ திருவிழா முழுக்க முழுக்க வர்ணம்
படத்துக்காகப் படம் பிடிக்கப்பட்டது. தனியாருக்குச் சொந்தமான ஒரு எஸ்டேட்டில் உள்ள
200 அடி நீர்வீழ்ச்சியில் சிறப்பு அனுமதி பெற்று பல காட்சிகள் படமாக்கப்பட்டன.
வர்ணம் படத்தின் இயக்குனர் எஸ்.எம்.ராஜூ மதுரையைச் சேர்ந்தவர். கம்ப்யூட்டர்
பொறியிலாளரான இவர் அமெரிக்காவில் பல வருடங்கள் பணியாற்றியவர். மைண்ட் சென், மீடியா
சென் போன்ற நிறுவனங்களை நடத்துபவர். பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குநர் சந்தோஷ்
சிவன் இயக்கிய ஆன்ந்தபத்ரம் என்கிற மலையாளப் படத்தைத் தயாரித்த இவர் அமெரிக்காவில்
பல குறும்படங்களை இயக்கியவர். வர்ணம் படத்தை அடுத்து ஒரு பிரபல தயாரிப்பாளரின்
படத்தை இயக்க இருக்கிறார் ராஜூ. |